பெங்களூரு, அக். 20–
கர்நாடகாவில் பாஜக கூட்டை எதிர்த்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் இப்ராகிம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய தலைவர் தேவகவுடா அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என கடந்த மாதம் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியால் அறிவிக்கப்பட்டது. இதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் என்.எம்.நபி, மாநில துணைத் தலைவர் சையத் சஃபி ஃபுல்லா சையத், முன்னாள் டெல்லி இன்சார்ஜ் முகமது அல்தாப், சிறுபான்மை பிரிவு முன்னாள் தலைவர் நசீர் உசேன், முன்னாள் இளைஞரணி தலைவர் என்.எம்.நூர் ஆகியோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
மாநில தலைவர் நீக்கம்
இந்நிலையில், ம.ஜ.த.வின் கர்நாடக மாநில தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சி.எம்.இப்ராகிம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த விவகாரத்தில், கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக குமாரசாமி செயல்பட்டுள்ளார். இந்த முடிவை அக்கட்சியின் ஆளும் குழு எடுக்கவில்லை. அதனால் இந்த கூட்டணி செல்லாது.
பா.ஜ.க.வுடன் எனது தலைமையிலான ம.ஜ.த. கூட்டணி அமைக்கவில்லை என்று கூறினார். ம.ஜ.த. தேசிய தலைவர் தேவகவுடா கூறுகையில், “கட்சியின் நலனுக்கு எதிராக செயல்பட்டதால், மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக, குமாரசாமியை, அக்கட்சியின் ஆளும் குழு தேர்வு செய்துள்ளது என்று கூறினார்.