ராஜஸ்தானில் பிரியங்கா காந்தி காட்டம்
ஜெய்ப்பூர், அக். 21–
ஏழை மக்களின் பணத்தை எடுத்து 2 தொழிலதிபர்களிடம் கொடுப்பதுதான் பாரதீய ஜனதா கட்சியின் ஒரே கொள்கை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெளசா மாவட்டத்தின் சிக்ராய் பகுதியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர்.
பாரதீய ஜனதாவின் ஒரே கொள்கை
அப்போது பிரியங்கா காந்தி பேசியிருப்பதாவது:–
”ராஜஸ்தானில் காங்கிரஸ் ஒற்றுமையாக உள்ளது. இங்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உள்ளோம். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் ஆணவத்தால் மாநில பா.ஜ.க பிளவுபட்டுள்ளது. ஒற்றுமைக்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பது மட்டுமே பா.ஜ.கவின் ஒரே நோக்கமாகவுள்ளது.
மக்கள் நலன் குறித்து பாரதீய ஜனதா கட்சிக்கு எந்த ஒரு அக்கறையும் இருந்தது கிடையாது. ஏழை மக்களின் பணத்தை எடுத்து இரண்டு தொழிலதிபர்களிடம் கொடுப்பதுதான் அவர்களது ஒரே கொள்கை. அதேபோல், பா.ஜ.க தலைவர்கள் தேர்தல் வந்துவிட்டால் ஜாதி, மதம் ஆகியவை குறித்து பேச தொடங்கி விடுவார்கள். அது ஏன் என பொதுமக்கள் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார்.