புவனேஸ்வர், மே 11–
காங்கிரசுக்கு இந்த தேர்தலில் 50 தொகுதிகள் கூட கிடைக்காது என பிரதமர் மோடி கூறினார்.
பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் இருப்பதாகச் சொல்லி எச்சரிக்கையுடன் நடக்கச் சொல்கிறார்கள். காங்கிரஸ் எப்போதும் மக்களை பயமுறுத்த முயற்சிக்கிறது என மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு தற்போதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தலைவர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார். ஆனால் பாரதீய ஜனதா 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் வசம் அணுகுண்டு உள்ளது என்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர் கருத்து தெரிவித்திருந்தார். இதனை பாரதீய ஜனதாவினர் கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால் அரசியல் ஆதாயத்தை பெறுவதற்காக மணி சங்கர் அய்யரின் பழைய பேட்டியை பா.ஜ.க. வேண்டுமென்றே பரப்பி வருவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டி வருகிறது.
இந்த கருத்துக்கு பிரதமர் மோடி இன்று பதிலடி தந்துள்ளார்.
400 தொகுதிகளில்
வெற்றி பெறுவோம்
ஒடிசா மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:–
நான் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் ஏழை மக்களின் வாழ்க்கை நிலைமையை உயர்த்துவதற்காக நான் அயராது உழைக்கிறேன். 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீள நான் உதவியுள்ளேன். ஏழைகள் அனைவரும் முன்னேறும் வரை நான் நிம்மதியாக இருக்க மாட்டேன்.
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.
எதிர்க்கட்சியாக இருப்பதற்குத் தேவையான இடங்களை காங்கிரஸ் பெற மாட்டார்கள் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்பதை காங்கிரசார் எழுதி வைத்து கொள்ளுங்கள்.
50 தொகுதிகளில் கூட
காங்கிரஸ் வெற்றி பெறாது
காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறாது. காங்கிரஸ் மீண்டும் மீண்டும் தனது சொந்த நாட்டை பயமுறுத்த முயற்சிக்கிறது.
பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது. கவனமாக இருங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார்.
குண்டுகளை தன்வசம் வைத்துள்ள பாகிஸ்தான் நாட்டின் நிலையைப் பாருங்கள். தங்கள் குண்டுகளை விற்பனை செய்ய முயல்கிறார்கள். ஆனால் வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. ஏனெனில் அவர்களது தரம் குறித்து அனைவரும் அறிந்ததே. காங்கிரஸ் எப்போதும் மக்களை பயமுறுத்த முயற்சிக்கிறது. இந்தியர்களின் மனதில் அச்சத்தை உருவாக்குகிறார்கள். எப்போதும் இதை தான் காங்கிரஸ் செய்து வருகிறது.
இந்தியா மதிப்பை உயர்த்தினோம்
காங்கிரஸ் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் மக்கள் 60 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை எதிர்கொண்டனர். காங்கிரசார் பயங்கரவாதிகளுடன் சந்திப்பு நடத்தியதை தேசம் ஒருபோதும் மறக்காது. மும்பை தாக்குதலுக்கு காங்கிரஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வாஜ்பாய் அரசால் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையானது, உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் மக்களின் 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பாரதீய ஜனதா முடிவு கட்டியது.
ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும். ஒடியா மொழி, கலாச்சாரம் தெரிந்த மண்ணின் மகனோ அல்லது மகளோ ஒடிசாவில் பா.ஜ.க. அரசின் முதல்வராக வருவார். ஒடிசா முதலமைச்சராக இருக்கும் நவீன் பட் நாயக்குக்கு சவால் விட விரும்புகிறேன். ஒடிசா மாவட்டங்கள் மற்றும் அந்தந்த தலைநகரங்களை காகிதத்தில் பார்க்காமல் அவரை எழுத சொல்லுங்கள். மாநிலத்தின் மாவட்டங்களின் பெயரை முதலமைச்சர் சொல்ல முடியாவிட்டால், உங்களது வலி அவருக்கு எப்படி தெரியும்?
ஒடிசாவில் என்னென்ன பணிகள் நடக்கின்றன என்று டெல்லியில் தினமும் கண்காணிக்கப்படுகிறது. ஒடிசாவை வளர்ந்த மாநிலமாக மாற்ற அனைத்தையும் செய்வேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.