செய்திகள்

10 மணி நேர சோதனை நிறைவு : சவுக்கு சங்கர் வீட்டில் கஞ்சா பறிமுதல்: வீடு, அலுவலகத்திற்கு சீல்

சென்னை, மே.11-

சென்னையில் சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் 10 மணி நேரம் நடந்த சோதனை நிறைவுபெற்றது. அவரது வீட்டில் கஞ்சா சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வீட மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

பிரபல ‘யூடியூபர்’ சவுக்கு சங்கர், தனியார் ‘யூடியூபர்’ சேனலுக்கு அளித்த பேட்டியில், உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கோவை பெண் போலீஸ் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது முதல் வழக்கு பதிவு செய்தனர்.

அதையொட்டி கோவை சைபர் கிரைம் போலீசாரால் அவர் கடந்த 4-ந்தேதி கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். தேனி அருகே பழனிச்செட்டிபட்டியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்யும்போது அவரது காரில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசார் 2-வது வழக்கை பதிவு செய்தனர். அதிலும் அவர் கைதானார்.

இதைத்தொடர்ந்து சேலம், திருச்சி போலீசாரால் அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே 2 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்த 2 வழக்குகள் தொடர்பாக சவுக்கு சங்கரை நேற்று கோவையில் இருந்து சென்னை அழைத்து வந்தனர். சென்னை தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மாலை அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். இது தொடர்பாக இருதரப்பு வக்கீல்களின் வாதம் நேற்று இரவு 9 மணிக்கு மேலும் நீடித்தது.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது தரமணி பெண் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா கொடுத்த புகாரின் பேரிலும், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக சி.எம்.டி.ஏ. சார்பில் கொடுக்கப்பட்ட புகாரையொட்டியும் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுவரையில் அவர் மீது மொத்தம் 8 வழக்குகள் பாய்ந்துள்ளது.

10 மணி நேர சோதனை முடிவு

இந்நிலையில், சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள அவரது வீட்டிலும், தி.நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கும் சென்ற சென்னை சைபர் க்ரைம் போலீஸார் இந்த சோதனையை மேற்கொண்டனர். அலுவலகத்தில் கஞ்சா எதாவது பதுக்கப்பட்டுள்ளதா.. அல்லது கஞ்சா வியாபாரிகளுடன் சவுக்கு சங்கருக்கு தொடர்பு இருக்கிறதா எதாவது ஆவணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது.

சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடந்த சோதனை நிறைவு பெற்றது. சோதனையின் முடிவில் கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு, தி.நகரின் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி சீல் வைத்தனர். முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *