மகளிர் ஆணையத்தில் பெண் காவலர்கள் அடுத்தடுத்து புகார்
கோவை, மே 15–
முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு கருத்து கூறியதாக சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்கள் மகளிர் ஆணையத்தில் அடுத்தடுத்து புகார் அளித்து வருகின்றனர்.
சவுக்கு சங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.மேலும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பெலிக்ஸின் யூ டியூப் சேனலில், முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது, ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக, இன்று சவுக்கு சங்கர் திருச்சி அழைத்து செல்லப்பட்டார். போலீஸ்அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை திருச்சிக்கு அழைத்துச்சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீஸ் வாகனத்தில் காவலுக்காக முழுவதும் மகளிர் போலீசார் மட்டுமே உடன் சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளர் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள 2 பெண் காவலர்கள் உள்பட 3 பேர் மகளிர் ஆணையரகத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். அதில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.