செய்திகள்

பெண்கள் நலனை மேம்படுத்த தமிழ்நாட்டில் மகளிர் கொள்கை

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, பிப்.22-

பெண்கள் நலனை மேம்படுத்துவதற்காக, மாநில மகளிர் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் 2024-ம் ஆண்டுக்கான மாநில மகளிர் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலன்மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநில மகளிர் கொள்கையில் இடம் பெற்றுள்ளமுக்கிய அம்சங்கள் வருமாறு:-

பாலின உணர்திறன் கொண்ட கல்வி முறையை நிறுவுதல் மற்றும் பெண் குழந்தைகளின் இடை நிற்றல் விகிதத்தை குறைத்தல்.

வளரிளம் பெண்கள் மற்றும் மகளிரின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல். வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல்.

அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அவர்களுக்கு உகந்த பணியிடங்களை உறுதி செய்தல்.

பெண்கள் நிர்வகிக்கும் சிறு தொழில்கள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்.

பெண்கள் அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு டிஜிட்டல் கல்வி யறிவை ஊக்குவித்து டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல்.

தொழில் துறையில், பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டை வழங்குவதன் மூலம் மகளிரிடையே நிலவும் திறன்இடைவெளியைக் குறைத்தல்.

நிறுவனக் கடன் வசதிகளை அணுகுதல் மற்றும் தேவைப்படும் மகளிருக்கு வங்கி கடனுதவி அதிகம் கிடைப்பதற்கு வழிவகை செய்தல்.

மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல், செயல்படுத்துதல். இந்த அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த கொள்கையில் இடம் பெற்றுள்ளது.

தலைமைச் செயலாளரின் தலைமையில் உயர்மட்ட அளவிலான பெண்கள் உரிமைக் குழு, தொடர்புடைய பிற துறைகளுடன் இணைந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து இடைக்கால திருத்தங்களை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கொள்கையின் செயலாக்கத்தை கண்காணித்து, எதிர்கொள்ளப்படும் சவால்களை சரிசெய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கை, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் அதிகாரப் பகிர்வை பற்றி எடுத்துரைப்பதுடன், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் மகளிரின் நிலையை மேம்படுத்துவதுடன், மகளிர் தங்களுக்குள் புதைந்துள்ள, இதுவரை கண்டறியாத சக்திகளை வெளிக்கொணர்ந்து பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், அவர்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான, லட்சியம் நிறைந்த சூழலை உருவாக்க ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கை 10 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும். மேலும், இந்த கொள்கையை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறுஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *