செய்திகள்

‘நீட்’ தேர்வு குளறுபடி: கருணை மதிப்பெண்ணால் 67 பேர் முதலிடம்

டெல்லி, ஜூன் 7–

நீட் தேர்வு குளறுபடி காரணமாக, கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டதால், 67 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் வருகிறது. மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த ‘நீட்’ எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. ‘நீட்’ தேர்வுக்காக பணம் படைத்தவர்கள் அதிகளவு பணம் கொடுத்து கோச்சிங் வகுப்பு சென்று படிக்கின்றனர். மேலும் பணத்தை கொடுத்தும், ‘நீட்’ தேர்வு வினாத்தாளை வெளியிட்டும் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இதனை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் தேர்வை நடத்தி வருகிறது.

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

முதலிடம் பெற்றது எப்படி?

இந்த சூழலில் நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தற்போது கருணை மதிப்பெண் மூலம் சுமார் 44 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல் பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்வி பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாக மாணவர்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது.

மேலும் இது தொடர்பாக சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேசிய தேர்வு முகமையில் முறையீடு செய்தனர். இதனால் அந்தக் கேள்விக்கு என்ன பதில் அளித்திருந்தாலும் (தவறாகவே இருந்தாலும்) மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த கருணை மதிப்பெண் மூலம் 44 மாணவர்கள் பெற்றிருந்த 715 மதிப்பெண்கள் 720 ஆக உயர்ந்தது.

இதன் காரணமாகவே எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக தற்போது தெரியவந்துள்ளது. அதேபோல், நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் சில மாணவர்கள் குற்றம்சாட்டி பதிவு வெளியிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *