தைபே, ஏப். 03–
தைவான் தலைநகர் தைபேவில் 7.4 ரிக்டர் அளவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
தைவான் தலைநகர் தைபேவில் 7.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவான நிலையில் 4 பேர் உயிரிழந்ததாக தேசிய தீயணைப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தைவானில் அடுத்தடுத்து 21 முறை நிலநடுக்கம் வெவ்வேறு ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. தைவானில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுகளின் பல படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கம் தைவான் மட்டுமின்றி சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளையும் உலுக்கியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜப்பானின் தொடர்புடைய துறையான ஜேஎம்ஏ சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சுனாமி அலைகள் 10 அடி உயரம் வரை எழும்பக் கூடும், எனவே கடல் பகுதிகளில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூகம்பங்களைப் போலவே, சுனாமிகளும் ஒரே நாளில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. எனவே, மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் உள்ள ஒகினாவா, மியாஜிகிமா மற்றும் யாயாமா தீவுகளில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது. தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து கடுமையாக சேதமடைந்தன.