சிறுகதை

தெய்வச் செயல் – ராஜா செல்லமுத்து

வாராவாரம் வியாழக்கிழமை மயிலாப்பூரில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் குமாரும் தினேஷும்.

எந்த வேலை இருக்கிறதோ இல்லையோ வியாழக்கிழமை என்று வந்துவிட்டால் காலையில் விரதம் இருந்து சாய்பாபா கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள் இருவரும்.

அத்தனை பக்தி. வழக்கம் போல அந்த வாரமும் தி.நகரிலிருந்து மயிலாப்பூருக்கு செல்வதற்கு ஷேர் ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். ஷேர் ஆட்டோ வருவதற்கு கொஞ்சம் தாமதமானது .அவர்கள் நின்று கொண்டிருந்த சாலையின் இடது புறம் ஆட்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள்

“எதற்காக இவர்கள் இப்படி நிக்கிறார்கள்?” என்று குமார் கேட்க

தெரியவில்லை என்று சொன்னான் தினேஷ். அருகில் இருக்கும் கடைக்காரர்

” தம்பி உங்களுக்கு தெரியாதா இங்கே வாரவாரம் வியாழக்கிழமை ஆனா பாபா பெயரை சொல்லி அன்னதானம் பண்ணுவாங்க. அதனாலதான் இங்க கூட்டம் . படிச்சவங்கள்ள இருந்து எல்லாருமே இந்த அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டு போவாங்க ” என்ற போது தினேஷைப் பார்த்த குமார்

“தினேஷ் பாபா இங்கேயே நமக்கு சாப்பாடு தர்றார் .சாப்பிட்டு போலாமா ? “என்று கேட்க.

” இல்ல வேண்டாம் நாம தான் மயிலாப்பூர் கோவிலுக்கு போறோம்ல அங்க தான் 24 மணி நேரமும் சாப்பாடு கொடுப்பாங்களே?. அங்கே போய் நம்ம சாப்பிட்டுக்கலாம் ” என்று தினேஷ் மறுக்க

” இல்ல இப்பவே மணி இரண்டு மணிக்கு மேல் ஆச்சு. ஒருவேளை அங்க சாப்பாடு இருக்குமோ இல்லையோ ? அப்படின்னு தெரியல நாம இங்க வாங்கி சாப்பிட்டு போறது நல்லதுன்னு நினைக்கிறேன்”

என்று குமார் வலியுறுத்த

” இல்ல குமார் நாம மயிலாப்பூரில் போய் சாப்பிட்டுக்கலாம்” என்று தினேஷ் மறுத்து பேச

சரி என்று குமார் தலையாட்ட சற்று நேரத்தில் லஸ் போகும் ஷேர் ஆட்டோ அவர்கள் முன்னால் வந்து நின்றது.

” மயிலாப்பூர் போகணும் ” என்று சொல்ல

“ஏறுங்க ” என்றான் ஆட்டோக்காரன்.

ஆட்டோ வேகமாக விரைந்தது. சற்று நேரத்திற்கு எல்லாம் மயிலாப்பூர் சாய்பாபா கோவிலுக்குள் நுழைந்தார்கள். சாதாரண நாட்களில் இருக்கும் கூட்டம் அன்று வியாழன் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அவர்கள் பாபாவைப் பார்த்து முடித்து சாப்பிட வரும்போது, மணி மூன்றை தொட்டு நின்றது. அப்போது சாப்பாடு இல்லாமல் சின்னத் தொன்னையில் பிரசாதம் கொடுத்தார்கள்

” என்ன இது மதியம் சாப்பிடாமல் கூட இங்க சாப்பிட்டுக்கொள்ளலாம்னு வந்தோம் . ஆனா நமக்கு சாப்பாடு இல்லாம போச்சே ? என்ற தினேஷ் வருத்தப்பட்டான்

” நான் அப்பவே சொன்னேன்ல. தி நகர்ல பாபா பேர்ல தான் அன்னதானம் போடுறாங்க சாப்பிடலாம்னு சொன்னேன். நீ தான் கேட்கல .பாத்தியா பாபா நம்மள பழி வாங்கிட்டார் ” என்று குமார் சொல்ல .

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. இங்கே நமக்கு பிரசாதம் கிடைத்தது .அதுவே பெரிய விஷயம் இல்ல. தினேஷ் நமக்கு வழி இல்லையே? சாப்பாடு கொடுத்தார்கள்

நாம தான் அதை உதறி தள்ளிட்டு வந்துட்டோம் என்று குமார் மறுபடியும் வலியுறுத்த

“இல்ல குமார் உனக்கும் எனக்கும் சாப்பிடற அளவுக்கு கடவுள் தகுதியை கொடுத்திருக்காங்க. ஆனா எத்தனையோ பேரு ஒருவேளை சாப்பாடு சாப்பிட முடியாம அதுக்கு காசு இல்லாம கூட வாழ்ந்துட்டு இருக்காங்க. நாம வாங்கி அந்த சாப்பாட சாப்பிட்டு இருந்தோம்னா இல்லாதவங்களுக்கு அது இல்லாம போகும் .அதனால பாபா நம்மள தண்டிக்கவெல்லாம் இல்லை. நம்ம வழியா நல்லது தான் பண்ணி இருக்கார்” என்று தினேஷ சொல்ல

இப்பப் பார் நமக்கு தட்டில சாப்பாடு போடாம தொன்னையில கொடுத்திருக்கிறார்கள் அதுவும். பிரசாதமா’’

” நிச்சயமா இல்ல குமார், கடவுளுக்கு தெரியும் நமக்கு என்ன செய்யணும்னு? ” என்று இவர்கள் இருவரும் வாதாடி கொண்டிருக்கும் போதே, பெரிய பெரிய அண்டாவில் வந்து இறங்கியது சாப்பாடு.

” எல்லாம் வாங்க சாப்பிடுங்க” என்று கோயில் இருந்தவர்கள் குரல் கொடுக்க ,இவர்கள் கேட்காமல் இவர்கள் கையில் காகித தட்டை கையில் திணித்தார்கள்

– இப்ப என்ன சொல்ற குமார் ?என்று தினேஷ் கேட்க , எதுவும் பேசாமல் சாய்பாபாவைத் திரும்பி பார்த்தான் குமார்.

அங்கே அவரின் புகைப்படத்திற்கு அருகில் சாப்பாட்டிற்கான தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தது. வரிசையில் நின்று பாபாவின் சாதத்தை வாங்கி சாப்பிட ஆரம்பித் தார்கள். குமாருக்கு இப்போது என்ன சொல்வது என்று தெரியவில்லை. தினேஷ் சிரித்துக் கொண்டே சாப்பிட்டான்.

Why fear when I am here.

என்ற வாசகம் பாபா இருக்கும் சிலை அருகே பொறிக்கப்பட்டிருந்தது.

#சிறுகதை

Loading

One Reply to “தெய்வச் செயல் – ராஜா செல்லமுத்து

  1. தெய்வச்செயல். நம்பிகை வைக்க வேண்டும், சுவாமி நம்மை சோதனை செய்பவர் இல்லை. நம்மை கைதூக்கி விடுவாரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *