செய்திகள்

தென் மாநிலங்களின் உரிமைகளை சந்திரபாபு நாயுடு பாதுகாப்பார்

ஸ்டாலின் நம்பிக்கை

புதுடெல்லி, ஜூன்.6-–

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் திடீரென சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று பகல் 1 மணி அளவில் டெல்லி சென்றார்.

விமான நிலையத்தில் அவரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து அவர் தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு சென்றார். அங்கு போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார்.

கூட்டம் முடிந்ததும், சென்னை திரும்ப டெல்லி விமான நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு முதலமைச்சர் வந்தார். அப்போது, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனையில் பங்கேற்றுவிட்டு ஆந்திரா மாநிலம் திரும்ப விமான நிலையம் வந்திருந்தார்.

அப்போது இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டனர். அந்த தருணத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து, தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதைப்போல மு.க.ஸ்டாலினையும் சந்திரபாபு நாயுடு வாழ்த்தினார்.

மத்திய அரசில் முக்கிய பங்கு வகித்து தென் மாநிலங்களின் உரிமைகளை அவர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று இந்த சந்திப்பு குறித்து ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *