செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு பாடத்திட்டம் மாற்றம்

சென்னை, மே 25–

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.ஆண்டுத்தோறும் தேர்வு அட்டவணையை வெளியிடும் தேர்வாணையம், ஒரு சில மாற்றங்களையும் அவ்வப்போது செய்து வருகிறது.

அந்த வகையில், கடந்த மாதம் குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ நிலையில் உள்ள பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும், குரூப் 2 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வும் கிடையாது என்று குறிப்பிட்டது.

இந்த நிலையில் குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும்,குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 2 முதன்மைத் தேர்வில், தமிழ் தகுதித் தாளும், பொது அறிவும் விரிவாக விடையளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வில், தமிழ் தகுதித் தாள் மட்டும் விரிவாக விடை அளிக்கும் வகையிலும், பொது அறிவு தாள் கொள்குறி முறையில் விடையைத் தேர்வு செய்யும் வகையிலும் புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், பொது அறிவுத்தாளில், 50 சதவீத வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலான பொது அறிவு சார்ந்தும், 20 சதவீத வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான கணக்கும், 30 சதவீத வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான பொது ஆங்கிலம் அல்லது பொது தமிழில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சியின் ஆண்டு திட்ட அட்டவணைப்படி, 2,300 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ-க்கான தேர்வு அறிவிப்பு ஜூன் 28-ம் தேதி வெளியாக வேண்டும். இந்த நிலையில், அதற்கு ஏற்ற வகையில் ஒரு மாதத்திற்கு முன்பு புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

#TNPSC #Group2 #Group2A #sylabus #Govtjob #TN

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *