செய்திகள்

சென்னையில் 14 நாட்களில் 66 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

சென்னை, ஜூன் 10–

சென்னையில் 14 நாட்களில் 66 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோ உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 09.06.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 330 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 111 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 156 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 23 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 7 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 12 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 4 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 3 குற்றவாளிகள் என மொத்தம் 651 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கடந்த 27.05.2024 முதல் 09.06.2024 வரையிலான 14 நாட்களில் 1 பெண் உட்பட 66 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *