சென்னை, மே. 11–
சென்னை எம்கேபி நகரில் கையில் போதை ஊசியை தனக்குத்தானே செலுத்திய நபர் உயிரிழந்தார். அது தொடர்பாக போதை மருந்துவிற்பனை செய்த கும்பலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, எம்.கே.பி நகர், காந்திநகர் 6வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சத்யநாராயணன் (24). கஞ்சா போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்வதில்லை. இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில், சென்னை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை சர்மா நகர் எஸ்டேட் உட்புறத்தில் உள்ள பகுதியில் போதை மாத்திரையை ஊசியில் கலந்து இடது கையில் போட்டுள்ளார். இதனால் சிறிது நேரத்தில் சுயநினைவின்றி மயங்கி விழுந்துள்ளார். இது தொடர்பாக சத்யநாராயணனின் நண்பர் உசேன் பாஷா என்பவர் அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சத்யநாராயணனின் அண்ணன் பிரசாந்த் வந்து பார்த்த போது சத்யநாராயணன் இறந்து விட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எம்கேபி நகர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சத்யநாராயணனின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யநாராயணனுக்கு போதை மருந்து விற்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது மஜீத் (22), வியாசர்பாடி அசேன் பாஷா (24) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் பின்புறம் உள்ள பகுதியில் அண்டா என்ற ராஜேந்திரன் என்பவரிடமிருந்து முகமது மஜீத் 200 ரூபாய்க்கு போதை மாத்திரை வாங்கி கொடுங்கையூர், எம்.கே.பி நகர் பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு 250 ரூபாய்க்கு விற்றுள்ளார். சக்திவேல் என்பவன் மஜீத் என்பவனிடம் வாங்கி 300 ரூபாய்க்கு அந்த பகுதியில் போதை மாத்திரைகளை விற்று வந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.