சென்னை, ஜூன் 1–
சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை இண்டிகோ நிறுவனத்தின் ’6இ – 5134’ என்ற விமானம் மும்பை செல்ல தயாராக இருந்தது. இந்த நிலையில், 172 பயணிகளுடன் மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அவசர தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் காலை 8.45 மனியளவில் அவசர அவசரமாக இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்டது. உடனடியாக அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதன்பின், விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் மற்றும் டெல்லியிலிருந்து வாராணாசி செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்து பயணிகள் அவசரமாக தரையிறக்கப்பட்டனர். தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் விமானப் போக்குவரத்து குறித்த அச்சம் பயணிகளிடையே எழுந்துள்ளது.