ஸ்டாலினுக்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்
சென்னை, ஜூன் 28–-
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி வருகிறார். அதற்கு பதிலளித்து முதலமைச்சருக்கு நேற்று அவர் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-–
இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்பாக தாங்கள் கடந்த 19, 24, மற்றும் 25-–ம் தேதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். கடந்த 26-ம் தேதி நிலவரப்படி, 34 தமிழக மீனவர்கள் இலங்கையில் நீதிமன்ற காவலில் உள்ளனர். 6 பேர் குற்றவாளிகளாக தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்.
அவர்களை அங்கிருந்து மீட்பதற்கான பணிகளில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் யாழ்பாணம் துணைத் தூதரகம் ஆகியவை தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த மீனவர் பிரச்சினையின் தொடக்கம் 1974–-ம் ஆண்டு ஏற்பட்டது என்பது உங்களுக்கு தெரியும். 2014–-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மீனவர்களின் நலன் கருதியும், வாழ்வாதாரங்களையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. எனவே இதனை உறுதி செய்ய இலங்கை அரசுடன் தொடர்பில் இருக்கிறோம். தமிழக மீனவர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம். அதில் எப்போதும் நாங்கள் உறுதியாக இருப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.