சிறுகதை

அவளல்லவோ பெண் ! – ஆர். வசந்தா

வானுலகில் ஒரே கொண்டாட்டம். ஆம், அடுத்த நாள் பூவுலகில் ஒரு பெண் குழந்தை பிறக்க இருக்கிறது. அக்குழந்தையை வழி அனுப்பவே இந்த விழா.

ஒரு தேவதை வந்து பெண் குழந்தையிடம் இளம் ரோஜா நிற பூங்கொத்தை கொடுத்தது. இந்த நிறம் உனக்கு அழகிய இளம் ரோஜா நிறத்தை கொடுப்பதுடன் நோயில்லா உடம்பையும் கொடுக்கும்.

அடுத்த ஒரு தேவதை வந்து இளம் நீலநிற பூங்கொத்தை கொடுத்தது. இந்த பூக்கள் உனக்கு அறிவு, ஆற்றலை தருவதும் கட்டுடலையும் உன் அழகையும் மேம்மைப்படுத்தும்.

பிறகு ஒரு தேவதை வந்து இளம் பசுமை நிறப் பூங்கொத்தைத் தந்தது. தேவதை சொன்னது இந்த மலர்கள் உனக்கு வாழ்க்கையில் வளம் சேர்க்கும். செழுமையுடன் நீ வாழ்வாய் என்றது.

அடுத்த தேவதை அந்த குழந்தை வெளியேறும்போது மஞ்சள் நிற பூங்கொத்தை தருகிறது. அது சற்று முரட்டு இதழ்களுடன் காணப்படுகிறது. இது தனக்கு வேண்டாம் அழகாயில்லை என்கிறது. இது தைரியமும் தன்னம்பிக்கையையும் உனக்குத் தரும்; கொண்டு செல் என்கிறது. வேண்டாவெறுப்புடன் அந்த பூக்களை குழந்தை வாங்கிக் கொள்கிறது.

மறுநாள் பூங்குடி என்ற கிராமத்தில் ஒரு ஜமீன்தாருக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன் நிறம் ரோஜா பூப்போல் இருக்கிறது. அத்துடன் சிவந்த அதரங்களும் சிவந்த கன்னங்களும் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறது. கண்டு ஆனந்தப்படுகிறது அந்த ஊரே. சுபத்ராதேவி என்பது அக்குழந்தைக்கு பெயரிடுகிறார்கள். குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து வருகிறது.

சிறிது காலத்தில் அக்குழந்தையை பள்ளியில் சேர்க்கிறார்கள். கல்வியுடன் பல ஆற்றல்களையும் பலன்களையும் கற்று வருகிறது.

அக்குழந்தையின் ரோஜா நிறம் மாறி இளம் நீல நிறமாகிறது. பருவ மங்கையும் ஆகிறாள். கண்டோர் வியக்கும் கட்டழகி ஆகி விடுகிறாள்.

ஜகதீசன் என்ற தொழிலதிபர் ஒருவர் சுபத்ராதேவியை மணக்கிறார். அவள் வீட்டில் வளமும் செழுமையும் குடி கொள்கிறது. பிரமீளா, பிரகாஷ், பிரதீப் என்ற 3 குழந்தைகள் பிறக்கின்றன.

சுபத்ராதேவி வீட்டைக் கவனிப்பதும் குழந்தைகளை வளர்ப்பதும் மட்டுமே அவள் வேலை.

மணப்பருவம் வந்த பிரமீளாவிற்கும் மாப்பிள்ளை பார்த்து விட்டனர். எதிர்பாராத விதமாக ஜகதீசன் மரணமடைய நேர்ந்தது. வாழ்வில் என்ன செய்வது என்று தடுமாறினாள் சுபத்ராதேவி. ஆனாலும் பார்த்த மாப்பிளையே மணம் செய்து விட்டாள் பிரமீளாவிற்கு.

கணவன் இறந்து 3 மாதங்கள் ஆகி விட்டன.

ஒரு நாள் 2 நூற்பாலையின் ஊழியர்களை அழைத்து என்ன செய்யப் போகிறோம். சேமிப்பெல்லாம் கரைந்து விட்டன என்று பேசிக் கொண்டிருந்தாள். இதைக் கேட்ட சுபத்ராதேவி நம்மைப் பற்றியே சிந்திக்கிறோமே. அவர்கள் நிலையை யோசிக்க நினைக்க வில்லையே என்று அப்போது தான் யோசனை வந்தது. அன்று இரவு ஒரு தீர்க்கமான முடிவெடுத்தாள் சுபத்ராதேவி.

மறுநாள் காலை 6 மணிக்கு ஆலையில் சங்கொலி ஒலித்தது. 8 மணிக்கெல்லாம் தொழிலாளிகள் அனைவரும் ஜகதீஸ் ஸ்பின்னிங்மில்லின் முன் நின்றார்கள். அனைவரையும் அவரவர் இடத்திற்கு செல்ல உத்தரவு வந்தது. முதலாளி இருக்கையில் சுபத்ரா தேவி இருந்தாள்.

வேலைக்கான உத்தரவுகளையும் அவளே பிறப்பித்தாள். சிறிது சிறிதாக நூற்பாலையும் ஓட ஆரம்பித்தது.

அவளுடைய மூத்த மகனையும் தன் மில்லுக்கு வரச் சொன்னாள். பிரகாஷிடம் புரொக்சன் பிரிவை நீ தான் இனிமேல் கவனிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாள். ஒரே ஒரு நிபந்தனை நம் ஊழியர்களுடனேயே வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு கொடுக்கப்படும் சிற்றுண்டிகளையே சாப்பிட வேண்டும் என்றாள். முதலில் மறுத்தான் பிரகாஷ். ஆனாலும் இது தான் உனக்கு வேலை என்று கண்டிப்பாக இருந்தாள் சுபத்ரா தேவி. அவர்களின் குறைகளைக் கண்டுகேட்டு முதலில் அவற்றை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டாள்.

முதலில் பஞ்சைச் சுத்தப்படுத்தும்போது அதிலிருந்து வரும் தூசுகள் தொழிலாளர்களின் மூக்கிற்குள் புகுந்து அலர்ஜி,ஆகி இருமல் தும்மல் வந்ததை நேரில் கண்டு தன் அம்மாவிடம் கூறினான் பிரகாஷ்.

அம்மாவும் நல்ல மாஸ்கை அனைவருக்கும் கொடுத்தாள். அதை கண்டிப்பாக போட வேண்டும் என்றும் வற்புறுத்தினாள்.

சுத்தப்படுத்தப்பட்ட பஞ்சுகள் மூலம் முதலில் சற்று பருமனான நூல்களை தயாரித்தார்கள். அவற்றை ‘மேட்’ செய்யும் கம்பெனிகளுக்கு அனுப்பினாள். அடுத்த கட்டமாக மிகவும் சன்னமான நூல்களைத் தயாரித்தாள். ஆர்டர் பேரில் அவைகளுக்கு சாயமும் ஏற்றப்பட்டன. சாய வேலைகள் செய்பவர்களுக்கு கைகளில் புண்ணாகும் தோல் எரிச்சலும் அதிகமாவதைப் பார்த்தான் பிரகாஷ். அம்மாவிடம் அது பற்றி சொன்னான். புண்ணுக்கு மருந்து கொடுத்து குணப்படுத்தியதுடன் எல்லாருக்கும் கனத்த கையுறைகளையும் கொடுத்தாள். புரொடக்சன் பிரிவு நன்றாக இயங்கியது.

தன் 2 வது மகன் பிரதீப் உள்ளூரில் படித்து விட்டு வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை வெளியிட்டான். சுபத்ரா தேவி நம் நாட்டில் இல்லாத படிப்பா! நம் நாட்டில் படித்தால் தான் நம்நாட்டு மக்களின் எண்ணம் புரியும். தொழிலாளர்களின் கஷ்டம் புரியும் என்றாள். விருப்பமில்லாமல் பிரதீப் ஸ்பின்னிங் மில்லிற்கே வந்தான். அவனை அட்மினிஸ்ரேட்டிங் பிரிவை கவனித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டாள்.

பிரதீப் ஆபீஸ் நிர்வாகத்தை கவனித்தான். லாபம் மிகவும் நல்ல நிலைமையில் இருந்ததைக் கவனித்தான் . மேலும் நிர்வாகப் பிரிவை முன்னேற்ற நினைத்தான்.

நேரடியாகவே பஞ்சை விவசாயிகளிடமே வாங்கினான். இடைத்தரகர் வேலைகளை குறைத்தான். லாபமும் உயர்ந்தது.

அவர்கள் மில்லில் வேலை செய்யும்பெண்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதாக கூறினார்கள். தம் அம்மாவிடம் சொல்லி சிறிய குழந்தைகளை காப்பகம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்தான். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

ஒரு சிறிய காய்கறி தோட்டமும் அமைத்தான். ஒவ்வொரு சனிக்கிழமையும் வாரக் கூலியுடன் கொஞ்சம் காய்கறிகளும் கொடுக்க ஏற்பாடு செய்தான்.

தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் கண்டார்கள். பிரகாஷ், பிரதீப் இருவர் திருமணமும் சீரும் சிறப்பாக நடந்தது.

புரொக்சனை பிரகாஷ், அட்மினிஸ்ரேசனை பிரதீப் மிகவும் நன்றாக கவனித்து வந்தார்கள்.

திடீரென சுபத்ரா தேவி உடல் நலம் குன்றினாள். அவளும் ஒரு நாள் மரணமடைந்தாள்.

அப்போது தான் ஒரு அதிசயம் நேர்ந்தது. அவள் முகம் மஞ்சள் நிறமாக மின்னியது. அனைவரும் எண்ணி வியந்தனர். காரணம் அவள் கடைசியில் கொண்டு வந்த தைரியம், தன்னம்பிக்கை என்ற மஞ்சள் நிறப் பூதான் அவள் முகத்தில் மின்னியது.

#women #womenempowerment #education #girlchild

Loading

One Reply to “அவளல்லவோ பெண் ! – ஆர். வசந்தா

  1. அருமையான பதிவு மகன்கள் வாழ்வில் முன்னேற தியாகம், தொடர்ந்தது வாழ்க வாழ்க வளர்க வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *