சிறுகதை

போதை – ராஜா செல்லமுத்து

92 வயதைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணையனுக்கு மது என்றால் கொள்ளைப் பிரியம்.

இளவயதில் குடிக்க ஆரம்பித்த கண்ணையன் முதுமை வந்த பிறகும் அதை விட முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார்.

தன் குடியால் சேர்த்த பணம், குடும்பம் அத்தனையும் சீரழிந்து போனது என்று அடிக்கடி வருத்தப்பட்டு சொல்லுவார்

நான் இந்த குடியை விட நினைக்கிறேன்; ஆனா விட முடியல; இதனால என் பொண்டாட்டி புள்ளைங்க பேரன் பேத்தி அத்தனை பேரும் என்ன மதிக்கிறதில்ல.

காரணம் குடி .ஆனா ஒரே ஒரு உண்மை மட்டும் எனக்கு விளங்க மாட்டேங்குது. குடி குடியைக் கெடுக்கும். குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் அப்படின்னு சொல்றாங்க.

குடிச்சா ஆளுக சில பேரு,சின்ன வயசுல செத்துப் போய் இருக்காங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் .

ஆனா நான் 92 வயசு வரைக்கும் நான் குடிச்சிட்டு தான் இருக்கேன். ஆனா எனக்கு எதுவும் ஆகல

என்று பேசிக் கொண்டிருந்தார் கண்ணையன்

ஒருநாள் திடீரென்று கீழே விழுந்து விட்டார் . அவரை அல்லாக்காக தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார்கள் குடும்பத்தார்கள்.

கண்ணையனைப் பரிசோதித்த டாக்டர் இவர் இவ்வளவு நாள் உயிரோட இருந்ததே பெரிய விஷயம் . ஏதோ கடவுள் கொடுத்த கருணையால வாழ்ந்துட்டு இருக்கார் .

இனி ஒன்னும் பிரச்சனை இல்ல . அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகளை கொஞ்ச நாளைக்கு கொடுக்கலாம்

என்று டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

அப்படிச் சொன்னது மட்டுமில்லாமல் கண்ணையனையும் அழைத்து

ஐயா வணக்கம். நீங்க நல்லா குடிச்சு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். அதனால தான் உங்க உடம்புல இருக்க பல பாகங்கள் கெட்டுப் போச்சு. போறது வரைக்கும் போகட்டும் உங்க வாழ்க்கை. ஆனா இனி இந்த குடிய நீங்க குடிக்க கூடாது. அப்படி குடிச்சீங்கன்னா உங்க உடல் நலம் மேலும் மோசமாயிரும். இதுவரைக்கும் நீங்க குடிச்சது போதும் . இனி கொஞ்ச நாளைக்காவது நிம்மதியா குடிக்காம இருங்க

என்று ஒரு மருத்துவராக இல்லாமல் கண்ணையனின் மகனாக அறிவுரை சொன்னார் அந்த டாக்டர்.

கண்டிப்பாக டாக்டர் நீங்க சொல்றத அப்படியே கேட்குறேன். இனிமே நான் குடிக்க மாட்டேன். இது சத்தியம்

என்று டாக்டர் கையைப் பிடித்து சத்தியம் செய்தார் கண்ணையன்.

அவரைச் சுற்றி இருந்த கண்ணையனின் குடும்பத்தார்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

சார் நாங்க என்னென்னமோ சொல்லிப் பாத்தோம். எங்க அப்பா திருந்தல. நீங்க சொன்னதும் திருந்திட்டாரு .ரொம்ப சந்தோசம்.

இருக்கிற இந்த கொஞ்ச நாளையாவது அவர் நிம்மதியாக சந்தோஷமாக வாழ என்ன தேவையோ அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுங்க பணத்தைப் பற்றி கவலை வேண்டாம். என்று மருத்துவரிடம் சொன்னார்கள் கண்ணையனின் பிள்ளைகள்.

அன்று இரவே அவருக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டு பெட்டில் சேர்க்கப்பட்டு, அவருக்கு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது

கண்ணையனைப் பார்த்துக் கொள்வதற்கு ஒரு பார்வையாளர் மட்டும் நியமித்து விட்டு கண்ணையனின் குடும்பத்தார்கள் வீட்டிற்கு சென்றார்கள்.

ஒரு நாள் இரண்டு நாளென்று தாக்குப் பிடிக்க முடியாத கண்ணையன் மூன்றாம் நாள் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்கும் டிப்பை கழட்டி கீழே வைத்துவிட்டு, உடன் இருக்கும் பணியாளரை ஏமாற்றிவிட்டு வெளியே வந்தார்.

ஐயா எங்க போறீங்க? என்று கேட்ட பணியாளருக்கு

தம்பி ஆஸ்பத்திரிக்குள்ள அடைஞ்சு கிடந்து கிடந்து ஒரு மாதிரியா இருக்குப்பா; வெளியே போயிட்டு வரேனே

என்று சொல்லிச் சென்ற கண்ணையன் சிறிது நேரத்திற்கு எல்லாம் முழு மது போதையில் வந்தார்.

போகும்போது சரியாக நடந்து போனவர் வரும்போது தடுமாறியபடியே வந்ததைப் பார்த்த பணியாளர்,

‘‘என்ன ஐயா இவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கலையே? மறுபடியும் குடிச்சிட்டு வந்து இருக்கீங்களே?’’

என்று கேட்டார்.

தம்பி இது இன்னைக்கு நேத்து பழக்கம் இல்லப்பா. சின்ன வயசுல ஆரம்பிச்ச பழக்கம். என்னால விட முடியல. யாருகிட்டயும் சொல்லாத

என்று நாறும் வாயைத் துடைத்துவிட்டு படுக்கையில் படுத்தார் கண்ணையன்.

மறுநாள் காலை பரிசோதனைக்காக வந்த மருத்துவர் கண்ணையனை கையைப் பிடித்து பார்த்து

குட் …. குட்…. முன்ன விட ரொம்ப நல்லா இருக்கீங்க. இன்னும் ரெண்டு மூணு நாள்ல டிஜ்சார்ஜ் ஆகி போயிடலாம் என்று கண்ணையனின் ரகசியம் தெரியாமல் மருத்துவம் சொல்லிப் போனார் அந்த டாக்டர் .

இதைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர் டாக்டரின் பின்னால் சென்று நடந்த உண்மையைச் சொன்னான்.

தம்பி எனக்கு எல்லாம் தெரியும். கண்ணையனுக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு. கடைசிக் கட்டத்தில் இருக்கிறார். . இத போய் அவர்கிட்ட சொல்லி அவரு மனசு புண்படுத்த வேண்டாம்னு தான் நினைச்சேன் விட்ரு .அவருக்கு என்ன தோணுதோ ?அதை செய்யட்டும். அடுத்த கதவ தொறந்தா மரணம் என்ற வாசலில் உட்கார்ந்து இருக்கிறார்.

இப்போ அவருக்கு சந்தோசம் தான் முக்கியம்

என்று சொன்ன மருத்துவர் பணியாளரின் தோளைத் தட்டி விட்டு சென்றார்.

கண்ணையன் மருத்துவரை ஏமாற்றியதாக நினைத்துக் கொண்டு மறுநாளும் குடிக்க புறப்பட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *