செய்திகள்

யூடியூபர் வாசன் செல்போனை ஒப்படைக்க போலீஸ் நோட்டீஸ்

மதுரை, மே 31–

யூடியூபர் வாசன் செல்போனை ஒப்படைக்க போலீசார் நோட்டீஸ் வழங்கினர்.

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 15-ந்தேதி டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

இவ்வழக்கில் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் வழங்கிய மதுரை மாவட்ட 6-வது ஜூடிசியல் கோர்ட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.அதன்படி முதல் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் நேரில் வந்த டி.டி.எப்.வாசன் கையெழுத்திட்டார். அப்போது வழக்கு விசாரணைக்காக டி.டி.எப்.வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென போலீசார் நேரில் நோட்டீஸ் வழங்கினர்.

அண்ணா நகர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த டி.டி.எப்.வாசனை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கேட்டனர். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட வந்துள்ளதால் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டாம் என டி.டி.எப்.வாசனும், அவரது வழக்கறிஞர்களும் அறிவுறுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *