செய்திகள்

தி.மு.க.வழங்கிய திட்டங்களே 100% வெற்றிக்கு காரணம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஜூன்.6-–

40 நாடாளுமன்றத் தொகுதிகளை யும் கைப்பற்றி 100 சதவீதம் வெற்றி பெறுவதற்கு தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தி.மு.க. அரசு வழங்கிய திட்டங்களே காரணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுள்ள வெற்றி தனித்தன்மையானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு முன் பெற்ற வெற்றிகளை எல்லாம்விட பெருமைக்குரிய மகத்தான வெற்றி இது. அவர் தி.மு.க.வின் தலைவராக பொறுப்பேற்ற 2018-ம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற 8 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பதாகவே தேசிய அளவில் உள்ள எதிர்க்கட்சி களை ஒருங்கிணைத்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தேசிய அளவில் அக்கூட்டணி மகத்தான வெற்றியை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கினார். கூட்டணிக் கட்சிகள் கட்டுப்கோப்பாக இணைந்து செயல்படுவதற்கும் ஊக்கம் தந்தார். தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே, நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பாகங்களின் முகவர்கள் கூட்டத்தினை நடத்தினார்.

இந்தியாவைக் காப்போம், உரிமைகளை மீட்போம்

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஒவ்வொரு முறையும் இந்தியாவைக் காப்போம், உரிமைகளை மீட்போம் என்ற அவரது குரல், பேசு பொருளாக மாறி இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்தது. தமிழ்நாட்டில் உள்ள கூட்டணிக் கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 50 சதவீத தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு மிகவும் பெருந்தன்மையுடன் பகிர்ந்தளித்தார். அவற்றுள்ளும் எளிதாக வெற்றிபெறக் கூடிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கினார். மிகவும் கடுமையாக முயன்றால்தான் வெற்றிபெற முடியும் என்றிருந்த தொகுதிகளில் தி.மு.க.வை போட்டியிடச் செய்தார்.

2004-ம் ஆண்டிற்குப் பிறகு புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சியினருக்கு நாடாளு மன்றத் தேர்தலில் பெற வேண்டிய வெற்றியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு ஆர்வத்தை வளர்த்தார். ஓய்வு சிறிதும் இல்லாமல் தேர்தல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கித் தொய்வின்றித் தொடர்ந்தார். தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 21 சட்டமன்ற இடைத்தேர்தல்கள், ஊரக உள்ளாட்சி தேர்தல்கள், 2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2022-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், நடந்து முடிந்த நாடாளுமன்றத் பொதுத் தேர்தல் உள்பட 8 தேர்தல்களில் தொடர்ச்சியாக மாபெரும் வெற்றிகளை ஈட்டிய தலைவர் மு.க.ஸ்டாலின்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தி.மு.க. அரசு நிறைவேற்றிய கட்டண மில்லா விடியல் பஸ் பயணத் திட்டம், 1.15 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம், கல்லூரி மாணவிகள், மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல சிறப்பான திட்டங்களை மக்களிடம் துல்லியமாக எடுத்துரைத்தார்.

நாற்பதும் நமதே

10 ஆண்டு காலம் இந்தியாவை ஆட்சி செய்த பா.ஜ.க. கட்சி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் வாய்ஜாலம் காட்டிய பொய்முகத்தை தமிழ்நாடு முழுவதும் மக்கள் அடையாளம் காணச் செய்தார். தி.மு.க.வின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றான சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பதன்படி, அவர் செய்த திட்டங்களை எல்லாம் பட்டியலிட்டுக் காட்டினார். அவர் செயல்படுத்திய சாதனைகளை எல்லாம் மக்கள் மனதில் பதியும்படிக் கூறினார். பா.ஜ.க. ஆட்சியின் முறையற்ற செயல்களை மக்களுக்கு எடுத்துரைத்து மக்களின் ஆதரவைத் திரட்டினார். ஒவ்வொரு நாளும் வேட்பாளர்களையும் தொண்டர்களை யும், தொடர்பு கொண்டு தொகுதி நிலவரங்களைக் கேட்டறிந்தார்.

இத்தகைய பணிகளின் வாயிலாக தேர்தலில் நாற்பதும் நமதே என்று கூறிய முழக்கம் மெய்பட்டு நாற்பதிலும் நூற்றுக்கு வெற்றி கிடைத்தது. இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள சரித்திரச் சாதனையாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *