திருப்பூர், ஏப். 09–
திருப்பூர் அருகே, கார் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.
திருப்பூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் – சித்ரா தம்பதியினர் தங்களின் 60-வது திருமண நாளை கொண்டாடுவதற்காக நேற்றைய தினம் திருக்கடையூர் சென்று விட்டு மீண்டும் திருப்பூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தக் கார் இன்று அதிகாலை வெள்ளகோவிலை கடந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓலப்பாளையம் என்னும் இடத்தில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
5 பேர் பலி
இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். இதை பார்த்த அப்பகுதியாக சென்ற வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.