சென்னை, நவ.27–
வாராக் கடன் உள்ளிட்ட பிரச்னைகளால் லட்சுமி விலாஸ் வங்கி பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால் அந்த வங்கியில் பண பரிமாற்றத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது.
இந்த வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் மட்டும் எடுக்கலாம் என்றும் டிசம்பர் 16–ம் தேதி வரை இந்த கட்டுப்பாடு தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனிடையே வங்கியின் நிதி நெருக்கடியை சீரமைக்கும் பணியும் ஒருபுறம் நடைபெற்று வந்தது. அந்த வகையில் லட்சுமி விலாஸ் வங்கியுடன் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிபிஎஸ் வங்கியை இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது.
இதன்மூலம், லட்சுமி விலாஸ் வங்கி கிளைகள் அனைத்தும் இன்று முதல் டிபிஎஸ் வங்கியின் கிளைகளாக செயல்பட உள்ளன. லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்களாக மாற்றப்படுவதால், வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடும் முடிவுக்கு வந்துள்ளது.