செங்கல்பட்டு, நவ. 9–-
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 2020–2021 சம்பா நெல் பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அ.ஜான் லூயிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு (2020 – 2021) சம்பா நெல் பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டமானது இப்கோ டோக்கியோ இன்ஷூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது. சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய பிரீமியமாக ஒரு ஏக்கருக்கு 451- ரூபாயை செலுத்தவேண்டும். காப்பீடு செய்ய கடைசி நாள் நவம்பர் 30-ந் தேதி ஆகும்.
எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய பொது சேவை மையம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கத்தில் பிரீமியத் தொகையினை செலுத்திடலாம்,
பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள் ஆதார் எண் நகல், கணிப்பொறி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் சாகுபடி அடங்கல் அல்லது விதைப்பு சான்று மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் பயிர் காப்பீடு செய்வதற்கான முன்மொழிவு விண்ணப்பத்துடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.