அந்தமானில் நாளை மேலும் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு:
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
புதுடெல்லி, டிச. 3–
தெற்கு அந்தமான் பகுதியில் நாளை மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும் பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து, புயலாக நேற்று வலுப்பெற்றது.
புரெவி என பெயரிடப்பட்ட இந்த புயல் நேற்று இலங்கை அருகே திரிகோணமலையில் கரையை கடந்தது. இந்த புரெவி புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலாய் தீபகற்பம் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வலுவடைந்து ‘நிவர்’, ‘புரெவி’ என 2 புயல்களாக மாறிய நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.