சென்னை, ஜூலை 30–
சிங்கப்பூரின் டிஎஸ்-சார் உட்பட 7 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் வாயிலாக இன்று காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நம்நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. அதன்படி சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-சார் எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் இன்று காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான இறுதிகட்ட பணிகளுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது.
7 செயற்கைக் கோள்கள்
இந்த ஏவுதலில் முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-சார் செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும். இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம் (23 கிலோ), ஆர்கேட் (24 கிலோ), ஸ்கூப்-2(4கி), நியூலயன் (3கி), கலாசியா(3.5கி), ஆர்ப்-12 ஸ்டிரைடர்(13கி) ஆகிய 6 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் பல்வேறு விதமான தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பயன்படும். இதற்கிடையே செயற்கைக்கோள்கள் அனைத்தும் திட்டமிட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், ராக்கெட்டின் இறுதி நிலையான பிஎஸ் 4 இயந்திரம், குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த முயற்சி, பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.