கொல்கத்தா, ஜூன் 28–
பாஜக தலைமையிலான அரசு அடுத்த 6 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கும் என்று மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் ஜூலை 8-ம் தேதி உள்ளாட்சித் தோதல் நடைபெறவுள்ள உள்ள நிலையில், வேட்புமனு தாக்கலின்போதே வன்முறை தொடங்கியது. இந்த வன்முறையில் காங்கிரஸ், இடதுசாரி வேட்பாளர்கள் உள்பட 5க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த செயலுக்கு மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையடுத்து, மத்திய படை பாதுகாப்புடன் தேர்தலை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், இதனை மம்தா ஏற்கவில்லை. பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று எல்லையோர கிராம மக்களை பிஎஸ்எஃப் வீரர்கள் மிரட்டி வருவதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டை பிஎஸ்எஃப் மறுத்துவிட்டது.
பாஜக ஆட்சி இருக்காது
இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளாட்சித் தோதலுக்காக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
‘தேர்தல் பாதுகாப்பு விஷயத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். இது தொடர்பாக பிஎஸ்எஃப்-பில் பணியாற்றும் அனைவரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. அவர்கள் எல்லையைப் பாதுகாக்கிறார்கள். அதே நேரத்தில் நாளை பாஜக ஆட்சியில் இல்லாமல் போகலாம் என்பதை எல்லைப்பாதுகாப்பு கடையினர் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்த மக்களவைத் தேர்தல் வரும் பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, பாஜக தலைமையிலான மத்திய அரசு அடுத்த 6 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கும். தேர்தலில் தோல்வியடைவோம் என்பதை ஏற்கெனவே பாஜக உணர்ந்துவிட்டது என்று மம்தா பேசினார்.