செய்திகள்

54 செ.மீ. மழை: வெள்ளத்தில் மிதக்கும் திருநெல்வேலி

Makkal Kural Official

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

குடியிருப்புகளில் நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி

நெல்லை, டிச. 13–

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

அம்பை – 36 செ.மீ.,காக்காச்சி – 35 செ.மீ., மாஞ்சோலை – 32 செ.மீ., நாலுமுக்கு – 31 செ.மீ., பாளையம்கோட்டை – 26 செ.மீ. சேரன்மகாதேவி, பாபநாசம் – 22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கே.டி.சி. நகர், கீழநத்தம் ஆகிய தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

திருநெல்வேலி காட்சி மண்டபம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகள், கோவில்களுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி ஜங்ஷன் மற்றும் மாநகராட்சி பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர்.

போக்குவரத்து துண்டிப்பு

செங்கோட்டை– கேரளா சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சபரிமலை பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. சாலைகளிலும், தாழ்வான இடங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. இளையரசனேந்தல் ரெயில்வே சுரங்கப்பாதையில் ஒரு அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

மழைக்கால அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம் – 1077, 0462 – 2501012 மாவட்ட காவல்துறை 0462 – 2562500, 99527 40740 மாநகர காவல்துறை 0462 – 2562651, 89399 48100 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் – 0462 – 2572099, 73050 95952 மின்சாரம் தொடர்பான புகார்கள் – 94987 94987

சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த திருநெல்வேலி மேயர் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

கனமழை தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் இளம் பகவத் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் அதிகளவு வெளியேற்றப்படுவதால் தாமிரபரணியில் உள்ள மருதூர் அணைக்கட்டுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆற்றில் வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அபாய கட்டத்தை எட்டவில்லை என்ற போதிலும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தண்ணீர் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், அகரம், ஆழ்வார் திருநகரி, ஆத்தூர், முக்காணி, புன்னக்காயல் வழியாக கடலில் கலக்கும். எனவே தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆற்றில் குளிக்க தடை

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், தேவைப்பட்டால் நிவாரண முகாம்களுக்கு வந்து தங்குமாறும், மக்கள் யாரும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

பல்வேறு அரசு துறை அலுவலர்கள் அவ்வப்போது வழங்கிடும் எச்சரிக்கைகளை ஏற்று நடந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைத்திடவும் வீடுகளில் போதிய அளவு குடிநீர் மற்றும் அவசரகால பயன்பாட்டுப் பொருட்கள், தேவையான மருந்து மாத்திரைகள், இருப்பு வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கனமழை காரணமாக அனந்தபுரி, கன்னியாகுமரி நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் திருநெல்வேலிக்கு தாமதமாக வந்து சேர்கின்றது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு ஆணையர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *