செய்திகள்

50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 500 கி.மீ. தூரத்தை 3 கி.மீ. வேகத்தில் 5 நாட்களாக கடந்த பெஞ்ஜல் புயல்

Makkal Kural Official

சென்னை, டிச. 3–

தமிழக புயல் வரலாற்றில் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 500 கி.மீ. தூரத்தை சுமார் 3 கி.மீ. வேகத்தில் பெஞ்ஜல் புயல் மிக மெதுவாக 5 நாட்களாக கடந்துள்ளது.

வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் மகாபலிபுரம் – புதுச்சேரி அருகே கரையை கடந்தது. தொடர்ந்து மேற்கு–தென் மேற்கில் பயணித்த புயல் புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் நிலைகொண்டது.

புயல் கரையை கடக்கும் போது செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனை தொடர்ந்து புயல் மேற்கு நோக்கி நகர்ந்தபோது, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பெஞ்ஜல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்தது. இது, மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, கர்நாடகம் வழியாக கேரளம் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளுக்கு இடையே உள்ள அரபிக்கடலை அடையும். இது அரபிக்கடலில் இறங்கும் போது அரபிக்கடல் காற்று திசைமாற்றம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், கேரளம் மற்றும் கர்நாடக பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெஞ்ஜல் புயல் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 50 ஆண்டுகால தமிழக புயல் வரலாற்றில் இது போன்றதொரு மெதுவாக நகர்ந்து, கரை கடந்த புயல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பொதுவாக புயல்கள் எப்போதும் அதிகபட்சமாக 250 கி.மீ. முதல் 300 கி.மீ. தூரத்தை 10 முதல் 12 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். ஆனால் பெஞ்ஜல் புயல் 3 கி.மீ. வேகத்தில் தான் பயணித்தது.

500 கி.மீ. தூரத்தை கடக்க 5 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளது. புயல்கள் அது உருவான நாளில் இருந்து 3வது நாளில் வலுவிழக்கும். ஆனால் நவம்பர் 25ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான 4 நாட்கள் கழித்து, 29ம் தேதி தான் புயலாக உருமாறியது. பொதுவாகவே, கடற்கரை பகுதியில் இருந்து ஒரு புயல் கடந்து விட்டால் அது வலுவிழக்கும்.ஆனால் 9 மணி நேரம் ஒரே இடத்தில் நிலைகொண்டு, கடலில் உள்ள ஈரப்பதத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு அதன் பின்னரே மெதுவாக கரை கடக்க ஆரம்பித்து இருக்கிறது. அதிக மழைப் பொழிவை பல மாவட்டங்கள் எதிர்கொண்டதற்கு இதுவே காரணம். வானிலை தரவுகளை மேம்படுத்தப்பட்ட முறையில் கணிக்க, சரியான சிஸ்டம் நம்மிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *