மதுரை, நவ.11–
திருமங்கலம் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனா். 13 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உரிமையாளர் கைது
இதையடுத்து ஆலை வெடிவிபத்தில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆலை வெடிவிபத்து சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி அளித்த புகாரின் அடிப்படையில், பட்டாசு ஆலை உரிமையாளர் அணுசுயா தேவி, வெள்ளையன், பாண்டி ஆகிய 3 பேர் மீது 8 பிரிவுகளின்கீழ் சிந்துபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ஆலை உரிமையாளர் அணுசுயா தேவியை திருமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.