செய்திகள் நாடும் நடப்பும்

4வது நாளாக தொடரும் டேங்கர் லாரி ஸ்டிரைக்

Makkal Kural Official

சென்னை, மார்ச் 30–

டேங்கர் லாரி ஸ்டிரைக் நான்காவது நாளாக தொடர்கிறது. இதனால் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல்லை தலைமை இடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. அந்த சங்க உறுப்பினர்களின் டேங்கர் லாரிகள் மூலம் மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாஸ் சிலிண்டர்களில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு ஏற்றி செல்லப்பட்டு வருகின்றன.ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்களுடன் நடைமுறையில் உள்ள ஒப்பந்தம் ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைய உள்ளது. பின்னர் செப்டம்பர் மாதம் முதல் புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது.

இதனிடையே புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சில தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், எனவே விதிமுறைகளை தளர்த்த வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. மேலும் கடந்த 24-ந் தேதி வரை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

பின்னர் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 27-ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 27-ம் தேதி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. தொடர்ந்து தென் மாநிலம் முழுவதும் இன்று 4வது நாளாக டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 4,000-க்கும் மேற்பட்ட எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *