சென்னை, ஏப். 25–
தமிழகத்தில் 3,935 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறும். இன்று முதல் மே மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215, இளநிலை உதவியாளர் 1,621, தட்டச்சர் 1,099, இளநிலை உதவியாளற் மற்றும் தட்டச்சர் 2, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, இளநிலை உதவியாளர்(பிணையம்) 46, இளநிலை உதவியாளர் 11, சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-III) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக் காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக் காவலர் 71 உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் 3,935 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு ஜூலை 12ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும். இதற்கு இன்று முதல் மே மாதம் 24ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.