டெல்லி, பிப். 28–
டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு இடையிலான 350 கிலோ மீட்டர் தூரத்தை, வெறும் 30 நிமிடத்தில் ஹைப்பர்லூப் ரெயில் சோதனைப் பாதையில் கடக்கும் சோதனை விரைவில் நடைபெற உள்ளது.
இந்திய ஒன்றிய ரெயில்வே அமைச்சகத்தின் உதவியுடன் சென்னை ஐஐடி, நாட்டின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை உருவாக்கியுள்ளது. அந்த ரெயில்கள் அதிவேகமாக மணிக்கு 1,100 கி.மீ. வேகத்திற்கு மேல் இடைநில்லா குழாய் வழியாக பயணிக்க அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் 422 மீட்டர் நீள பாதையில் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
ஹைப்பர்லூப் ரயில் பாதையில் தொடக்க சோதனைகள் சுமார் 350 கிமீ தூரத்தை வெறும் 30 நிமிடங்களில் கடக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளன. தொழில்நுட்பம் முழுமையாக சோதிக்கப்பட்டு பயன்படுத்தத் தயாரானதும் இந்திய ரயில்வே, முதல் வணிக ஹைப்பர்லூப் திட்டத்தைத் தொடங்கும்.
30 நிமிடங்களில் கடக்கலாம்
இதுதொடர்பான பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தனது எக்ஸ் பக்கத்தில் செய்திகளைப் பகிர்ந்து இருந்தார். அப்போது எதிர்கால போக்குவரத்து தொழில்நுட்பங்களில் புதுமைகளை எவ்வாறு இயக்குகின்றன என்பதை வலியுறுத்தினார். மேலும் அரசு மற்றும் கல்வித்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார்.
ஹைப்பர்லூப் பாதையில் முதல் சோதனைகள் சுமார் 350 கிமீ தூரத்தை வெறும் 30 நிமிடங்களில் கடக்க முடியும் என்பதை நிரூபித்தன. பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டால், பயணிகள் டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு சுமார் 30 நிமிடத்தில் பயணம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.
இதன் சோதனை வெற்றி பெற்றவுடன், இந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஹைப்பர்லூப் ரயில் சேவை வந்துவிட்டால் தொலைவில் உள்ள இடங்களில் 30 நிமிடங்களில் செல்ல முடியும் என்கிறார்கள்.
சென்னை – பெங்களூரு இடையே உள்ள 325 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 16 நிமிடங்கள் 15 வினாடிகளில் கடந்து விட முடியும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 8 வெவ்வேறு ஹைபர்லூப் தொழில்நுட்ப வழித்தட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.