புதுடெல்லி, ஜன. 1–
நாடு முழுவதும் 3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டில் வங்கிக்கணக்குகள் இல்லாத குடிமக்கள் வெகு குறைவு. அதே நேரத்தில் அந்த கணக்குகளை நுகர்வோர் சரியாக பயன்படுத்துவது இல்லை என்ற புகார்கள் இருக்கின்றன. பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் நீண்ட நாள்கள் பயன்படுத்தாத கணக்குகளை 3 வகைகளாக பிரித்து, அவற்றை வங்கி நிர்வாகம் மூடவுள்ளன.
பயன்பாட்டில் இல்லாத கணக்குகள்
2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எவ்வித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் பயன்பாட்டில் இல்லாத கணக்காக வகைப்படுத்தப்படுகிறது.இந்த கணக்குகளை குறிவைத்து சைபர் மோசடி நடத்தப்படுகிறது. அதனால், இந்த வகை கணக்குகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
செயலற்ற கணக்குகள்
12 மாதங்களுக்கு மேலாக எந்தவித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகளாக வகைப்படுத்தப்படுகிறது.இந்த வகை கணக்குகளை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமானால், வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளையை நேரடியாக அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்புத் தொகை இல்லாத கணக்குகள்
நீண்ட நாள்களாக இருப்புத் தொகை இல்லாமல் இருக்கும் ’ஜீரோ பேலன்ஸ் கணக்கு’களை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இத்தகைய கணக்குகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
12 மாதங்களாக செயலற்ற முறையில் உங்கள் கணக்கு இருந்தால், உடனடியாக ஒரு பரிவர்த்தனை மேற்கொண்டு வங்கி நடவடிக்கைகளில் இருந்து தப்பிக் கொள்ளலாம். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கணக்கு செயல்பாட்டில் இல்லையென்றால், வங்கிக் கிளையை நேரடியாக நாடி, கணக்கை புதுப்பித்துக் கொள்ளலாம்.மேலும், உங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.