சென்னை, ஆக 10–
நடப்பு ஆண்டில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலானோர் உறுப்பு தானம் செய்ய முன் வந்ததற்கான கின்னஸ் உலக சாதனையை படைத்தது, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை.
3 மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பு தான உறுதிமொழிகளைப் பெற்றதற்காக இந்த மருத்துவமனை ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 45,861 பேரிடமிருந்து உறுப்புதான உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. இந்த முயற்சிக்கு வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் அமைப்பு அதிகாரப்பூர்வ சான்றளித்துள்ளது.
சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற்ற சிறப்பு விழாவில் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியனின் பிரதிநிதிகளான ஆலிஸ் ரேனாட், சாதனை அதிகாரி ஷரீஃபா ஹனீஃப் ஆகியோர் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தரிடம் சான்றிதழை வழங்கினர்.
இந்நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அரசின் உறுப்புப் மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் செயலர் என். கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வை திறம்பட ஏற்படுத்தும் வகையில் ஒரு விரிவான யுக்தி செயல்படுத்தப்பட்டது. ஒரு அர்ப்பணிப்புள்ள குழு, தெரு நாடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், மக்களிடத்தில் சிறப்புரைகள் வழங்குதல் உள்ளிட்ட பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் மருத்துவமனை நடத்தியது. அதே நேரத்தில், இதை அதிகப்படியான மக்களை வேகமாக சேர்த்திட சமூக ஊடகங்கள் வழியாக ஒரு வலுவான டிஜிட்டல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. உறுதிமொழி அளிக்கும் செயல்முறையை எளிதாக்க, ஒரு பிரத்யேக ஆன்லைன் இணைப்பு மற்றும் QR குறியீடுகள் உருவாக்கப்பட்டன என்று ஒருங்கிணைப்பாளர் பிரகதீஸ்வரன் விளக்கினார்.
உறுதியளித்தவர்களில் பலரும் பல உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர். இதில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் முழுமையான உறுப்பு மற்றும் திசு தானத்திற்குத் விருப்பம் தெரிவித்தனர். சிறுநீரகம், கல்லீரல், இருதயம், நுரையீரல் மற்றும் கணையம் போன்ற முழு உறுப்புகளுக்கான உறுதிமொழிகள் அதிகமாக இருந்தன. கண்பார்வை தானங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தன. தோல் தானங்களும் முக்கிய இடம் பிடித்தன என்றும் அவர் கூறினார்.
![]()





