ஐதராபாத், அக்.27-
3 நாள் ஓய்வுக்குப்பின் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தெலுங்கானாவில் இருந்து இன்று மீண்டும் துவங்கியது.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பிரிவினை அரசியல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு உள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தை கடந்து 23-ந்தேதி தெலுங்கானாவில் நுழைந்தது. அத்துடன் தீபாவளிக்காக 3 நாட்கள் ஓய்வு விடப்பட்டது. இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி டெல்லி திரும்பினார். நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் நாராயணப்பேட்டை மாவட்டத்தில் ராகுல் காந்தியின் 50வது நாள் நடைபயணம் தொடங்கியது. 3 கி.மீ. பயணத்துக்குப்பின் அங்குள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராகுல் காந்தி வழிபாடு செய்து பயணத்தை தொடர்ந்தார். இன்று சுமார் 27 கி.மீ. பாதயாத்திரை செல்லும் ராகுல் காந்தி, இரவில் மக்தாலில் உள்ள ஸ்ரீபாலாஜி தொழிற்சாலையில் ஓய்வெடுக்கிறார்.
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தெலுங்கானாவில் 16 நாட்கள் நடக்கிறது. இதில் 19 சட்டசபை தொகுதிகள், 7 நாடாளுமன்ற தொகுதிகள் என மொத்தம் சுமார் 375 கி.மீ. தூரத்தை கடந்து, அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி மகாராஷ்டிராவில் நுழைகிறார்.
தெலுங்கானா பாதயாத்திரையின் போது பல்சமய வழிபாட்டுத்தலங்களுக்கு ராகுல் காந்தி சென்று வழிபாடு செய்கிறார். அத்துடன் அரசியல், விளையாட்டு, வர்த்தகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களையும் அவர் சந்தித்து பேசுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கடந்த 50 நாட்களாக 4 மாநிலங்களில் 1,230 கி.மீட்டர் தூரத்தை நடைபயணக் குழுவினர் கடந்துள்ளனர்.