செய்திகள்

3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 7 லட்சம் லிட்டர் ‘ஆவின்’ பால் விற்பனை அதிகரிப்பு

Makkal Kural Official

அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை, டிச 17–

தி.மு.க. ஆட்சியில் ஆவின் நிறுவனத்தின் சாதனையாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 7 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை மெட்ரோ மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் சுமார் 200 வகையான பால் உபப்பொருட்களை தயாரித்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019–-2020–ம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை தற்போது 2024-–2025–ல் சுமார் 7 லட்சம் லிட்டர் அதிகரித்து 30 லட்சம் லிட்டர் அளவில் விற்பனையை அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் உடல் நலத்திற்கு ஏற்றவாறு வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு அனைவரும் விரும்பும் வகையில், புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் சோதனை அடிப்படையில் சில ஒன்றியங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தனியார் நிறுவனத்தின் விற்பனை விலையைக்காட்டிலும் குறைவான விலையில் ஆவின் நிறுவனம் பால் விற்பனை செய்து வருகிறது.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவை குறைக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *