கடலூர், பிப்.12-–
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம், திருப்பெயர் கிராமத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெற்றோரை கொண்டாடுவோம் மாநாடு வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கான வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்வது, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கான இருக்கைகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்துவது குறித்து பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். இந்த நிகழ்ச்சி 6 மண்டலங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு, தற்போது 7-வது மண்டல மாநாடாக கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள திருப்பெயர் பகுதியில் நடைபெற உள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களை ஒருங்கிணைத்து கடலூர் மண்டல பெற்றோர்- ஆசிரியர் கழக மாநாடு நடைபெற உள்ளது.
முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் சரண்யா, முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், கோட்டாட்சியர் சையத் மெஹ்முத், ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.