வேதாரண்யம், ஆக. 22–
வேதாரண்யம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆற்காட்டுத்துறையிலிருந்து பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான படகில் அவருடன் அருள்ராஜ், செல்வமணி, தினேஷ் ஆகிய 4 மீனவர்கள் நேற்று பிற்பகலில் கடலுக்குள் சென்றனர். கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இதே போல, மேலும் 5 படகுகளில் இருந்த ஆற்காட்டுத்துறையைச் சேர்ந்த 21 மீனவர்கள் மீதும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதனால் பாதிக்கப்பட்டு கரை திரும்பிய மீனவர்கள், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என். கௌதமன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட விவரம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். தொடர்ந்து மீனவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.