சென்னை, நவ. 23–
அடுத்த 2025-ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமைகளுடன் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை நாட்கள் தவிர, இதர பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும். அந்த வகையில், அடுத்த 2025-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும் 2025-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் மூடப்பட வேண்டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடுமுறை நாட்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் ஏப்ரல் 1ம் தேதி திங்கள் கிழமை விடுமுறை என்பது வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பொது விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும்.
விடுமுறையை பொறுத்தவரை, இந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் பொதுவான சனி, ஞாயிறு விடுமுறை நாட்களைத் தவிர வேறு அரசு விடுமுறை என்பது இல்லை.
ரம்ஜான், தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி பண்டிகை ஆகியவை திங்கள் கிழமைகளில் வருவதால், 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். மேலும், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி ஆகியவை வெள்ளி, சனிக்கிழமைகளில் வருவதால் 3 நாள் தொடர் விடுமுறையாக அமைகிறது.
மேலும் இந்தாண்டு, குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, பக்ரீத் பண்டிகை, மொகரம், கிருஷ்ண ஜெயந்தி சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வருகிறது.