லண்டன், ஜன. 25–
2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக வெளியான ஆவணப் படத்தின் இரண்டாவது பாகத்தை பிபிசி வெளியிட்டுள்ளது.
குஜராத்தின் கோத்ரா நகரில் 2002-ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனா். அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தாா். குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் எடுத்தது.
”இந்தியா: மோடி மீதான கேள்வி” (பகுதி -1) என்ற தலைப்பில் பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதத்தில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.
2 வது ஆவணப்படம்
இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், யூடியூப் விடியோ மற்றும் அதன் இணைப்புகளைக் கொண்ட டுவிட்டர் பகுதிகளை முடக்கி இந்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவது ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
“மோடி கேள்வி” பற்றிய பிபிசி ஆவணப்படம் இரண்டாம் பாகத்தின் நல்ல இணைப்பு கிடைத்துள்ளது என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோவை இணைத்துள்ளார்.
இரண்டு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியிடப்பட்டுள்ளது. குஜராத் கலவரத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்படம் வெற்றுப் பிரசாரம் என வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது. அதே வேளையில், விரிவான ஆய்வுக்குப் பிறகே ஆவணப்படம் உருவாக்கப்பட்டதாக பிபிசி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.