சென்னை, மார்ச் 7–
சென்னை, எழும்பூர் சி.எம்.டி., வளாகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாளக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகம், சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகையின் நான்காவது மாடியில் உள்ளது. மதுபான கொள்முதல் விவகாரத்தில், சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, தி.மு.க., – எம்.பி., அவரது நண்பர் ஜெயமுருகன் நிறுவனங்கள் மற்றும் ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில் டாஸ்மாக் அலுவலகத்தில் இன்றும் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள எஸ்.என்.ஜே. டாஸ்மாக் ஒப்பந்ததாரர் தலைமை அலுவலகம், எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் மதுபான ஆலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்ற அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.