மும்பை, ஜன. 13–
முன்னாள் ஒன்றிய அமைச்சர் சரத் பவார் 1978 ஆம் ஆண்டு தொடங்கிய துரோகத்தை 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க முடித்து வைத்ததாக ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வியால் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கலகலத்துப்போய் இருக்கிறது.
இந்நிலையில், பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் நடந்தது. இக்கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, முன்னாள் ஒன்றிய அமைச்சர் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்தார். இதில் பேசிய அமித் ஷா, ”மகாராஷ்டிராவில் பா.ஜ.க பெற்ற வெற்றியால், துரோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சரத் பவார் 1978 ஆம் ஆண்டு துரோகத்தை தொடங்கி வைத்தார். மக்கள் அதனை 20 அடி ஆழத்தில் புதைத்துவிட்டனர்.
சரத் பவார் துரோகம்
உத்தவ் தாக்கரே எங்களுக்கு துரோகம் செய்தார். 2019 ஆம் ஆண்டு பால் தாக்கரேயின் கொள்கையை அவர் கைவிட்டார். இன்றைக்கு மக்கள் அவருக்கான இடத்தை காட்டி இருக்கிறீர்கள். உத்தவ் தாக்கரே துரோகத்தின் மூலம் முதல்வரானார். பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரையிலான பா.ஜ.கவின் வெற்றிக்கு கட்சி தொண்டர்களாகிய நீங்கள்தான் காரணம்.
மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது. மகாராஷ்டிரா கூட்டுறவுத்துறையில் சரத் பவார் மிகப்பெரிய தலைவர். அவர் வேளாண் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால் அவரால் விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த முடியவில்லை” என்றும் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
1978 ஆம் ஆண்டு வசந்த்தாதா பாட்டீல் அரசில் இருந்து 40 எம்.எல்.ஏ.க்களுடன் சரத் பவார் வெளியேறி முதல்வரானார். அதன் பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கொண்ட சரத் பவார் 1999 ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். 2023 ஆம் ஆண்டு சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் அதே துரோகத்தை சரத் பவாருக்கு செய்தார். 2023ம் ஆண்டு அஜித் பவாரும் 40 எம்.எல்.ஏ.க்களுடன் வெளியில் சென்று பா.ஜ.க வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து துணை முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.