செய்திகள்

15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் இல்லை: டெல்லி அரசு உத்தரவு

Makkal Kural Official

டெல்லி, ஏப். 14–

டெல்லியில் 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை கண்டறிய பெட்ரோல் பங்க்குகளில் நவீன கேமரா பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் புதிதாக பதவியேற்றுள்ள பாஜக அரசு, பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை வழங்குவதில்லை என கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் சி.என்.ஜி. வாகனங்களை கண்டுபிடிப்பதற்காக பெட்ரோல் பங்க்குகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் பணி தொடங்கப்பட்டது.

பெட்ரோல் வழங்க தடை

இதனிடையே ஏப்ரல் 1 ந்தேதி முதல் எரிபொருள் மறுக்கும் திட்டத்தை தொடங்க பாஜக அரசு திட்டமிட்ட நிலையில் அதனை செயல்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முழுமையாக பணியை முடித்த பின் இந்த மாத இறுதியில் இருந்து பெட்ரோல், டீசல் வழங்க தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மொத்தம் 500 பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. நிலையங்கள் உள்ளன. இவற்றில் 372 பெட்ரோல் பங்குகளிலும், 105 சி.என்.ஜி. நிலையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள நிலையங்களில் விரைவில் கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை மந்திரி மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறுகையில், “இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஒரு பெட்ரோல் பங்க்கில் அதை செயல்படுத்தி, மற்றொரு பங்க்கில் செயல்படுத்தாவிட்டால் இந்த திட்டத்தால் என்ன பயன்? எனவேதான், அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டவுடன் திட்டத்தை செயல்படுத்துவது என முடிவு எடுத்து இருக்கிறோம்” என்று கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *