செய்திகள்

13 மாவட்டங்களில் இன்று வெயில் சதம்:

Makkal Kural Official

வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, ஏப். 27–

தமிழ்நாட்டின் 7 இடங்களில் நேற்று வெயில் சதமடித்த நிலையில், இன்று மதுரை, கரூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. அதேபோல ஈரோடு, கரூர் பரமத்தி மற்றும் வேலூரில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில், திருத்தணி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

13 மாவட்டங்களில் வெயில் சதம்

இந்த நிலையில், இன்றும் தமிழ்நாட்டின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக, மதுரை, கரூர், ஈரோடு, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயில் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று விடுமுறையைக் கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில் கனமழை வெளுத்து வாங்கியது. அதேபோல தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட இடங்கள் கோடை மழையால் குளிர்ந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தது. இதனிடையே, இன்றும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *