சென்னை, செப். 15–
அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருஉருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ப.ரங்கநாதன், ஜோசப் சாமுவேல், பரந்தாமன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் ஆகியோரும் அண்ணாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதன் பிறகு வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, உருவப் படத்துக்கு மலர் தூவி வணங்கினார். இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெரு மக்களுடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி., சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, மயிலை வேலு, ஜெ.கருணா நிதி எம்.எல்.ஏ., எழிலன், மோகன், பூச்சிமுருகன் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று அங்கு உள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருத் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று அண்ணா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.