சென்னை, ஏப். 25–
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு இன்று துவங்கியது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6–ந்தேதி தொடங்கி மே 30–ந்தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5–ந்தேதி தொடங்கி மே 28–ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் இன்று காலை துவங்கியது. வழக்கமாக 3 மணி நேரம் நடத்தப்படும் செய்முறைத் தேர்வு, பள்ளிகளின் பரிந்துரையின்படி நடப்பாண்டு முதல் 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மே 2–ந்தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெறுகிறது. சென்னையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர்.
தேர்வுத் துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.