செய்திகள்

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: 12–ந்தேதி அனைத்து கட்சி கூட்டம்

தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, நவ.9-

10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வருகிற 12ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான வழிவகை செய்யும் அரசியல் சட்டத்திருத்தம், கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது.

இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 7ந்தேதி அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக்கொள்கைக்கும் மாறானது என்பதால், இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டசபை அனைத்து கட்சித்தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதற்கு ஏதுவாக, வருகிற 12ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில், தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டசபை அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இப்பொருள் குறித்து மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து சட்டசபை கட்சி தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை கட்சியின் சார்பாக 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *