சென்னை, செப்.26-
10 கோடி பார்வைகளை கடந்து தமிழ் மின் நூலகம் சாதனை படைத்துள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் அடைந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் தமிழ் இணைய கல்வி கழகம், தமிழ் மின் நூலகம் www.tamildigitallibrary.in என்ற இணையதளத்தை கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. அதில் இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நூல்களும், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
சீகன் பால்கு 1716-ம் ஆண்டு லத்தீன் மொழியில் அச்சிட்ட கிரமடிக்கா டமுலிகா என்னும் தமிழ் இலக்கண நூல், தஞ்சை சரபோஜி மன்னர் தொகுப்புகள், உ.வே.சா.வின் அரிய பதிப்புகள், சித்த மருத்துவச் சுவடிகள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், சங்க இலக்கியங்கள், இலக்கண நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதி நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறார் இலக்கியங்கள், மருத்துவ நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், கலைச்சொல்லகராதிகள், ஓலைச்சுவடிகள் என மிகப் பெரும் அறிவுச் சுரங்கமாக விளங்குகிறது இந்த நூலகம்.
வ.உ.சிதம்பரனாரின் 150-ம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வைக் கொண்டாடும் வகையில் அவர் தொடர்பான 127 நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், ஒளிப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய வ.உ.சி. சிறப்பு இணையப் பக்கத்தை கடந்த 2022ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் கலைஞரின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் ‘கலைஞர்–100′ என்னும் தனி இணையப் பக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மின் நூலகம் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 1.5 கோடி பார்வையைக் கடந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் 6.5 கோடி பார்வைகளைப் பெற்று இருந்தது. தற்போது குறுகிய காலத்தில் தமிழ் மின் நூலகம் 10 கோடிப் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.