சென்னை, ஜன.11–
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 45 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 434 ஆண்கள், 290 பெண்கள் என மொத்தம் 724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 208 பேரும், கோவையில் 76 பேரும், செங்கல்பட்டில் 40 பேரும், சேலத்தில் 48 பேரும், திருவள்ளூரில் 36 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தலா 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் நேற்று யாருக்கும் பாதிப்பு இல்லை.
தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 26 ஆயிரத்து 261 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 4 லட்சத்து 99 ஆயிரத்து 395 ஆண்களும், 3 லட்சத்து 26 ஆயிரத்து 832 பெண்களும், 3ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 29 ஆயிரத்து 631 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 650 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 857 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 875 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.தற்போது சிகிச்சையில் 7 ஆயிரத்து 164 பேர் உள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேரும் என 7 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக உயிரிழப்பு 10க்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் இதுவரையில் 12 ஆயிரத்து 222 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 936 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 1,027 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 513 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 948 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2,146 பயணிகளுடன் தொடர்பில் இருந்த 3,873 பேரை சோதனை செய்ததில், இங்கிலாந்தில் இருந்து வந்த கொரோனா பாதிக்கப்பட்ட பயணிகளுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 45 லட்சத்து 24 ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஒரே நாளில் 63 ஆயிரத்து 794 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.