செய்திகள்

1 லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்: விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்

Makkal Kural Official

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை, டிச.3-–

புயல் மழையால் 1 லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், கணக்கெடுப்பு முழுமையாக நடத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் நிச்சயம் வழங்கப்படும் என்றும் விழுப்புரம் வெள்ளச்சேதத்தை பார்வையிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

பெஞ்ஜல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக் கணக்கான வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் பயிர்கள் பெருமளவு சேதமடைந்தன. இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-–

பெஞ்ஜல் புயல் காரணமாக தமிழ்நாடு பரவலாக கடுமையான மழைப்பொழிவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் இதுவரை கண்டிராத மழையை சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்படைந்து மின்சாரம் இன்றி பல பகுதிகள், பல கிராமங்கள், பேரூராட்சிகள் சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதையும் சரி செய்யும் பணியில் மின்வாரியத் துறையின் சார்பாக 900 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தண்ணீர் வடிந்த

பகுதிகளில் மின்சாரம்

தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் எல்லாம் உடனடியாக மின்சாரம் தர முடியாத சூழ்நிலை இருக்கிறது. தண்ணீர் வடிந்த பகுதிகளில் எல்லாம் உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மழையின் அளவு கடலோர மாவட்டங்களில் குறைந்திருந்தாலும், உள்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தற்போதைய உத்தேச கணக்கெடுப்பின்படி, 1 லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் பெறப்பட்டுள்ளது. மழை முழுவதுமாக நின்ற பிறகு, தேங்கியுள்ள நீர் வடிந்தபின், முறையான, முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயமாக வழங்கப்படும்.

நான் ஏற்கனவே தெரிவித்தபடி, பெஞ்ஜல் புயலின் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றினை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து, சேதங்களைப் பார்வையிட உடனடியாக குழுவினை அனுப்பி வைப்பதற்கான அந்த கோரிக்கையையும் நிச்சயமாக தமிழ்நாடு அரசின் சார்பில் நாங்கள் வைக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நம்பிக்கையோடு இருக்கிறோம்

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தூத்துக்குடி மழை வெள்ளத்தின்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கேட்ட தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. தருவார்கள் என நம்பிக்கை இருக்கிறதா? கடுமையான பாதிப்புகளை தமிழ்நாடு சந்திந்திருக்கிறதே?

பதில்:- நம்பிக்கையோடுதான் அனுப்புகிறோம். அதையும் எப்படி சமாளிப்பது என்பதை பிறகு முடிவு செய்கிறோம்.

கேள்வி:- நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் புயல் பாதிப்பை பற்றி பேசவிடவில்லையே?. அப்படி இருக்கும்போது நம்முடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா?.

பதில்:- பேசவிடவில்லை. முறைப்படி இது எங்களுடைய கடமை. எவ்வளவு சேதாரம் ஏற்பட்டிருக்கிறது; மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். விவசாயத்தைப் பொறுத்தவரையில் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இவற்றையெல்லாம் கணக்கெடுத்து அனுப்புவது எங்களுடைய கடமை. அதைச்செய்வது அவர்களுடைய கடமை. ஆனால் அதை செய்ய ஒவ்வொரு முறையும் மறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும், அதையும் மீறி நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம். பார்ப்போம்.

கேள்வி:- முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். நாங்கள் எல்லாம் எங்கள் ஆட்சியில் பயிர்களுக்கெல்லாம் வருடத்திற்கு இரட்டை இழப்பீடு கொடுத்தோம். ஆனால், தி.மு.க. அரசு காலம் தாழ்த்தி வழங்குகிறது என்று கூறியிருக்கிறாரே?.

பதில்:- அவர் எதிர்க்கட்சி தலைவர், குற்றம் சொல்வதுதான் அவருடைய கடமை. அதைப்பற்றி நாங்கள் என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது. இருந்தாலும் நான் சொல்கிறேன். மக்களுக்கு தெளிவாக தெரியும். எந்த ஆட்சியில் மக்களுக்குரிய பணிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று நன்றாக தெரியும்.

கேள்வி:- விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கிறது. அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியமான உணவு, குடிநீர் தேவைப்படுகிறது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறதா?.

பதில்:- உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. படகுகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலமாக கொண்டு போய் சேர்க்கப்படுகிறது.

வானிலை மைய அறிவிப்பு சரியா?

கேள்வி:- 50 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. வானிலை மையத்தின் அறிவிப்பு நமக்கு சரியான முறையில் இருந்ததா?.

பதில்:- ஓரளவு இருந்தது.

கேள்வி:- அடுத்த மாவட்டத்திற்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புள்ளதா?.

பதில்:- தேவையில்லை. அங்கெல்லாம் மழை பெய்து பாதிப்பு அதிகம் இல்லை. விழுப்புரம், கடலூர், சென்னை, சென்னையை ஒட்டியுள்ள சில இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இப்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது என்ற தகவல் வந்தது. உடனடியாக துணை முதலமைச்சரிடம் தொலைபேசியில் பேசி அவரை உடனடியாக போகச் சொல்லியிருக்கிறோம். அதுமட்டு மல்லாமல், பொறுப்பு அமைச்சர்கள், அருகில் உள்ள மாவட்ட அமைச்சர்களையும் உடனடியாக அங்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள சொல்லியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, எஸ்.எஸ். சிவசங்கர், ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செஞ்சி மஸ்தான், லட்சுமணன், சிவா, கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *