சென்னை, பிப். 28–
பெருங்குடல் (ரெக்டல் – ஆசனக் குடல்) புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது.
இப்புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஒருங்கிணைந்த உயர்நுட்ப சிசிச்சைகள் அளிக்கப்படும். உறுப்புகளை அகற்றாமல் பாதிப்பை சரி செய்ய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடந்தது.
அதில் அப்பல்லோ மருத்துவக் குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கலந்து கொண்டு ஒருங்கிணைந்த பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் சர்வதேச புற்றுநோய் மைய இயக்குனர் ஹர்ஷத் ரெட்டி, புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன், செந்தில் கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏஆர்சி என்னும் அப்பல்லோ பெருங்குடல் (ரெக்டல்) புற்றுநோய் சிகிச்சை திட்டத்தின் கீழ் ரோபோடிக் அறுவை சிகிச்சை, ஹெச்ஐபிஇசி என்னும் உயர்வெப்ப நிலையில் கீமோ தெரபி அளிக்கும் சிகிச்சை உள்ளிட்ட உயர்நுட்ப சிகிச்சைகள் வழங்கப்படும் என்று பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார்.